தமிழ்நாடு தலைமை காஜி மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் நேற்று (சனிக்கிழமை) இரவு காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூபின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
கற்றறிந்த பேராசிரியரான அவர், தனது சமூகச் சேவைகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார். தன்னுடைய பண்பால் இஸ்லாமிய சமூகத்தினரின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றிருந்த அவரது மறைவு, ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
மூப்பெய்திய போதும், நான் பங்கெடுக்கும் இப்தார் நிகழ்வுகள் அனைத்திலும் தன்னுடைய உடல்நலன் ஒத்துழைக்கும் வரையில் பங்கேற்பேன் என்று சொல்லிய அவரை இன்று இழந்து வாடுகிறோம். அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு-வின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.