தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்!
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் 14-ம் தேதி சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. இதனையடுத்து, மார்ச் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது.
மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதிவரை துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் 6 மாத கால இடைவெளிக்கு பிறகு சட்டப்பேரவை இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று (அக்.14) தொடங்கி, வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன், நாகலாந்து மாநில ஆளுநர் இல கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழக அரசின் முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.