"ஆசிரியர்களின் உரிமைகளைப் பறிப்பதா?" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய ஊக்க ஊதியத்தை வழங்காமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்களில் சுமார் 1000 ஆசிரியர்களுக்கு இன்னும் ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, தணிக்கைத் தடை என்ற பெயரில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 8 வகையான ஊக்க ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய ஊக்க ஊதியத்தை வழங்காமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியாற்றி ஓய்வு பெறும் போது கடைசி பணி நாளில் அவர்களுக்கு உரிய ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், 2024-25ஆம் கல்வியாண்டில் ஓய்வுபெற்ற தொடக்கக் கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்களில் 1000 பேருக்கு இன்னும் ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. அவை அவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்பதும் தெரியவில்லை. 30 ஆண்டுகளுக்கு மேல் அரசு பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வுக்காலப் பயன்களை வழங்க வேண்டியது அரசின் முதல் கடமை; அதை வழங்க மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
அதேபோல், நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பி.லிட்., பி.எட். பட்டப்படிப்புகளை படித்து முடித்ததற்காக வழங்கப்படும் ஊக்க - ஊதியத்தை வழங்க தமிழ்நாடு அரசு மறுக்கிறது. கற்பிக்கும் பாடம் தவிர்த்து பிற பாடங்களில் பட்டம் பெறுதல், நேரடியாக முதுநிலை பட்டம் பெற்றவர்கள் பி.எட் பட்டம் பெறுதல், ஆசிரியர்களில் இளையோர் & முதியோர் இடையிலான ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பதவி உயர்வுக்கான ஊதியத்தை நிர்ணயித்தல், 1993-ஆம் ஆண்டின் சிறப்புப் படிகளை பெறுதல், கீழ்நிலை, மேல்நிலை பணிக்காலத்தை ஒருங்கிணைத்து தேர்வு நிலை, சிறப்பு நிலை தகுதிகளைப் பெறுதல், 2009-ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியாக பணியாற்றியதற்கான தேர்வுநிலை தர ஊதியம் பெறுதல் ஆகியவற்றை தணிக்கைத் தடையை காரணம் காட்டி தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 280ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 286-இன்படி மேற்குறிப்பிடப்பட்ட 8 உரிமைகளையும் ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், அரசாணைக்கு முற்றிலும் எதிரான வகையில் தணிக்கைத் துறையும், தொடக்கக் கல்வித்துறை இயக்குனரும் ஆணைகளை பிறப்பித்து ஆசிரியர்களின் உரிமைகளை பறித்து வருகின்றனர். இந்த சிக்கலில் தலையிட்டு தீர்வு காண வேண்டிய தமிழ்நாடு அரசோ, அனைத்தையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆசிரியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை நினைத்துக் கவலைப் படாத தமிழ்நாடு ஆட்சியாளர்கள், அதன் மூலம் அரசின் செலவுகள் குறைவதை நினைத்து மகிழ்ச்சியடைகின்றனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் போது, அதற்கு தணிக்கைத் துறையின் தடைகள் - முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது. தேவையின்றி விதிக்கப்படும் தடைகளை உடனடியாக அகற்றி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான உரிமைகள் கிடைப்பதை உறுதி செட்ட வேண்டியது அரசின் கடமை ஆகும். அதிலிருந்து திமுக அரசு ஒருபோதும் பின்வாங்கக்கூடாது. தமிழ்நாட்டில் விடுதலைக்கு பிந்தைய காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களுக்கு எதிராக மிக மோசமாக செயல்படும் அரசு என்றால், அது இப்போது ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தான்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும், பகுதிநேர ஆசிரியர்களும், தற்காலிக ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் வழங்கிய திமுக, அவற்றின் ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக செய்யும் பெருந்துரோகம். இந்த துரோகத்திற்கும், ஆசிரியர்களின் மன உளைச்சல் மற்றும் வேதனைகளுக்கும் அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். தணிக்கைத் துறையால் போடப்பட்டுள்ள தேவையற்ற தடைகள் அனைத்தையும் அகற்றி, ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் அரசு உடனே வழங்க வேண்டும்"
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.