”தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவில் மாற்றம் செய்த உச்ச நீதிமன்றம்”
நாடு முழுவதும் தெருநாய் கடி சம்பவங்கள் ஏற்பட்டு ரேபிஸ் நோய் தாக்கத்தினால் உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகர் டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து 8 வாரத்திற்குள் காப்பகத்திற்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து டெல்லி முழுவதும் தெருநாய்கள் மாநகராட்சி பணியாளர்களால் பிடிக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் இந்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அமர்வு இன்று வழங்கிய உத்தரவில் மாநகராட்சிகள் தெரு நாய்களை பிடிக்க பிறப்பித்த முந்தைய உத்தரவை தடை செய்ய மறுப்பு தெரிவித்தனர்,
மேலும் கடந்த 11 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் சில மாற்றங்கள் மேற்கொண்டுள்ளது, அதன்படி, தெருக்களில் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து அதனை கருத்தடை செய்து,உரிய தடுப்பூசி செலுத்தி மீண்டும் பிடிக்கப்பட்ட பகுதியிலே விடலாம். அதை வேளையில் மிகவும் ஆக்ரோஷமாகவும், ராபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாய்களை மீண்டும் பிடிக்கப்பட்ட பொதுபகுதியில் விடக்கூடாது. அவற்றை காப்பகங்களில் தனியாக வைத்திருக்க வேண்டும். நாய்களைப் பிடிப்போரை தடுப்பவர் மீது 25 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, பொதுவெளியில் தெருக்களில் நாய்களுக்கு உணவளிக்கக்கூடாது,தெருவோர நாய்களுக்கு உணவளிக்க கூடியவர்கள் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் தான் உணவளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களிலும் தெரு நாய் விவகாரம் தொடர்பான நிலுவையில் வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், நீதிபதிகள்,நாடு முழுவதும் பொருந்தக்கூடிய ஒட்டு மொத்த வழிகாட்டு நெறிமுறைகளை தெரு நாய்கள் விவகாரத்தில் ஏற்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. மேலும் தெரு நாய்கள் விவகாரத்தை எவ்வாறு கையாள்வது இதற்கென்று எத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது இது தொடர்பாக அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறபித்துள்ளது.