‘தக் லைஃப்’ பட வெளியீடு விவகாரம் - கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
மணிரத்னம் - கமல் ஹாசன் கூட்டணியில் கடந்த 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றது.
இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பு நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்று கமல் ஹாசன் கூறியிருந்தார். இதற்கு கன்னட அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்ப, தொடர்ந்து கமல்ஹாசனிடம் கர்நாடக வர்த்தக சபை மன்னிப்பு கேட்க கோரியது. கமல் ஹாசன் அதற்கு மறுக்க தக் லைஃப் படம் வெளீயீட்டுக்கு கர்நாடக வர்த்தக சபை தடை விதித்தது. இது தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம், கமல் ஹாசன் என்ன மொழியியல் வல்லுநரா? என சரமாரி கேள்வி எழுப்பியது. அதன் பின்னர், தக் லைஃப் படக்குழு படத்தின் வெளியீட்டை கர்நாடகாவில் ஒத்தி வைத்தது. இவ்விவகாரம் தொடர்பாக மகேஷ் ரெட்டி என்பவர் கர்நாடகத்தில் திரையிட விதித்த தடையை எதிர்த்த ரிட் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் அந்த மனு மீதான விசாரணை இன்று(ஜூன்.13) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “படம் திரையிடப்பட முடியாத சூழ்நிலை உள்ளது. வெறுப்பு பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன. திரையரங்குகளுக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளது. படம் திரையிடப்பட முடியாத சூழ்நிலை உள்ளது” என்று வாதிட்டார். வாதங்கங்களை கேட்டறிந்த உச்சநீதிமன்றம், கர்நாடக அரசு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.