லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!
ரயில்வே துறையில் வேலைக்காக நிலம் பெற்ற ஊழல் வழக்கு மீதான விசாரணைக்கு தடை கோரி லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2004-2009ம் ஆண்டின் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வே துறையில் குரூப்-டி பிரிவில் வேலைக்காக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கும் படி , லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து லாலு பிரசத் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவில், இந்த விசாரணை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், சி.பி.ஐ.யின் தற்போதைய விசாரணை என்பது ஊழல்தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ-வின் கீழ் அனுமதி பெறாத ஒன்றாகும், எனவே இந்த விசாரணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும், இந்த விவகாரத்தில் தற்போது தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தனர். எனவே டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை மெரிட் அடிப்படையில் விசாரிக்கட்டும் எனவும் தெரிவித்தனர்.
அதேவேளையில், இந்த வழக்கு விசாரணைக்காக லாலு பிரசாத் யாதவ் நேரில் ஆஜராகவதிலிருந்து மட்டும் விலக்கு அளிப்பதாகவும் தெரிவித்து லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.