சூப்பர்பெட் கிளாசிக் செஸ்: சாம்பியன் பட்டத்தை வென்றார் பிரக்ஞானந்தா!
ருமேனியாவின் புகரெஸ்ட் நகரில் நடைபெற்று வந்த சூப்பர்பெட் கிளாசிக் தொடரில், 18 வயதான இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.
இந்த தொடரில் 10 சுற்றுகள் நடந்து முடிந்த நிலையில் 5.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா, பிரான்சின் மாக்சிம் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா பிரூஸ்ஜா ஆகியோருடன் சமநிலையில் இருந்தார்.
இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதல் 2 டை பிரேக்கர் போட்டிகள் சமனில் முடிவடைந்த நிலையில் 3-வது டை பிரேக்கரில் வச்சியர்-லக்ரேவை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். முன்னதாக, இறுதிச் சுற்றில் பிரக்ஞானந்தா அமெரிக்க வீரர் லெவோன் அரோனியனை எதிர்கொண்ட நிலையில் போட்டி டிராவில் முடிந்தது.
சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
“ரொமேனியாவில் நடைபெற்ற பெருமைமிக்க ‘சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025’ போட்டியில் வாகைசூடி, தனது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்றுள்ள ‘நமது சென்னையின் பெருமிதம்’ கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள்.
கிளாசிக்கல் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் அசாதாரணமான அமைதியையும் உத்திமிகுந்த ஆழத்தையும் அவரது திறமையான ஆட்டம் வெளிப்படுத்தியது. இந்திய சதுரங்கத்தின் குறிப்பிடத்தக்க இந்த தருணத்தை தமிழ்நாடே கொண்டாடுகிறது,” என்று கூறியுள்ளார்.