மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்த விவகாரம் - தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், பத்தரசன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி சோமையா (வயது 14). இவர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில், நேற்று கணினி வகுப்பின்போது, ஆய்வகத்தில் கணினிக்கு மாணவர் மின் இணைப்பு கொடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது.
இதில் மாணவர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக மாணவரை மீட்ட ஆசிரியர்கள் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாணவரின் உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் என்று கூறி உறவினர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்துச்சென்றனர்.
மாணவர் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தார். இந்த நிலையில், பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன் மற்றும் வகுப்பு ஆசிரியர் பாண்டி முருகன் ஆகிய இருவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து உத்தரவிட்டுள்ளார்.