ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. மீனவர்களை கைது செய்வதுடன் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து விடுவர். இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலும் அடைக்கப்படுவர். இதனை நிறுத்த அரசு நடவடிக்க எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்… கரூரில் பரபரப்பு!
இருப்பினும் இச்சம்பம் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. ஒருசில நேரங்களில் ஒரு படி மேலே சென்று மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும் உண்டு. அந்த வகையான சம்பவம் ஒன்று தற்போது நடந்துள்ளது. மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். தொடர்ந்து, இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீனவர்கள் வைத்திருந்த மீன்களை அள்ளிக் கொண்டு விரட்டி அடித்தனர். இதனால் ராமேஸ்வரம் மீனவர்களின் படகு ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.