இலங்கை : வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியது. இதனிடையே கும்புக்கனை நகர சாலையில் சென்ற ஒரு பேருந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இது குறித்த தகவலின்பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் பேருந்தை மீட்டு பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். அதேசமயம் அம்பாறை பகுதியில் கார் அடித்துச்செல்லப்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகிய நிலையில் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர்.
இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ள நிலையில் 6000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்..