Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“கூட்டணி கட்சிகளை மிரட்டுவதற்காக சிலர் மாநாடு நடத்துகின்றனர்” - பூவை ஜெகன்மூர்த்தி!

12:11 PM Oct 08, 2024 IST | Web Editor
Advertisement

“கூட்டணி கட்சிகளை மிரட்ட வேண்டும் என்பதற்காகவே மதுஒழிப்பு போன்ற மாநாடுகளை சிலர் நடத்துகின்றனர்” என புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

SC,ST மக்களுக்கான காலி பணியிடங்களை நிரப்பாத தமிழ்நாடு அரசை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் நேற்று கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பூவை ஜெகன்மூர்த்தி பேசியதாவது:

எஸ்சி, எஸ்டி மக்களுக்கான 10,000 காலி பணியிடங்களை அரசு நிரப்பவில்லை. அதற்காகதான் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம். எஸ்சி, எஸ்டி மக்களின் வாழ்வாதாரத்தில் திமுக அரசு தொடர்ந்து விளையாடி வருகிறது. இந்த மாதம் 30-ம் தேதிக்குள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். பணியிடங்களுக்கான தேர்வின் தேதியும் நிர்ணயிக்க வேண்டும். இது மக்களின் வாழ்வாதார பிரச்சனை. இது மதுக்காக நடைபெறும் கூட்டம் என்று நினைக்கிறார்கள்.

மது ஒழிப்பு மாநாடு என்று சொல்லிவிட்டு, மது குடித்துவிட்டு மாநாடுக்கு செல்கிறார்கள். ஒரு சிலருக்கு குடித்தால் தான் தூக்கம் வரும். சிலர் குடித்தால் தான் பேசுவார்கள். கூட்டணி கட்சிகளை மிரட்ட வேண்டும் என்பதற்காக இது போன்று மாநாடுகள் நடைபெறுகிறது. வடநாட்டில் இருந்து பிழைக்க வந்த பெண்களை எல்லாம் அழைத்து வந்து, ஒவ்வொரு பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு மாநாட்டை நடத்த தேவையில்லை.

பட்டியலின மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம், இந்த இயக்கம். அவர்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். புரட்சி பாரதம் கட்சியை தவிர, மற்ற எந்த கட்சியும் மக்களுக்காக போராட்டம் நடத்துவதில்லை. ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள திட்டங்கள் தமிழ்நாட்டில் ஏன் இல்லை? தமிழ்நாட்டில் கொண்டு வந்துள்ள அனைத்து திட்டங்களுக்கும் முழு காரணமாக புரட்சி பாரதம் இருக்கிறது. எல்லாத் துறைகளும் முன்னேற புரட்சி பாரதம் குரல் கொடுத்து வருகிறது.

எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு போட்டாலும், நாங்கள் காவல்துறையினருக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். 13 வருடங்களாக ஒரு எஸ்.ஐ இன்ஸ்பெக்டராக முடியவில்லை. ஒரு இன்ஸ்பெக்டர் டிஎஸ்பியாக முடியவில்லை. காவல்துறையினரின் வாழ்வாதாரம் குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை. அவர்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு புரட்சி பாரதம் கேள்வி கேட்டு அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

நாங்கள் உங்களிடம் இனாம் கேட்கவில்லை. இது மக்களின் உரிமை. மக்களின் உரிமையை தான் கேட்கிறோம் (பணியிடங்கள் நிரப்புவது குறித்து). மகளிர் உரிமை திட்டம் பொதுவான திட்டம் என சொல்லி விட்டு, எஸ்சி, எஸ்டி மக்களின் பணத்தை திருடி எங்களுக்கே கொடுக்கிறார்கள். நம்முடைய பணத்தை எடுத்துக் கொண்டு ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் வழங்குகிறார்கள். இதைப்பற்றி கேள்வி எழுப்பினால் நேரில் அழைத்து சமாதானம் செய்கிறார்கள்.

மத்திய, மாநில அரசின் முழு நிதியையும், முழுமையாக செலவழிக்காததைதான் புரட்சி பாரதம் கட்சி கண்டிக்கிறது. தொடர்ந்து செலவழிப்பது குறித்து திமுக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் போலி தலைவர்களை நாம் அடையாளம் காட்ட வேண்டும். இந்த அரசு முடிவதற்கு இன்னும் 17 அமாவாசைகள் தான் உள்ளது. அதற்குள் இந்த திட்டங்களை செயல்படுத்துவார்களா? என்ற கேள்வியைதான் நாங்கள் முன்வைக்கிறோம்.

தொடர்ந்து எஸ்சி, எஸ்டி மக்களின் காலி பணியிடங்களை நிரப்பவில்லை என்றால், இதுபோன்ற ஆர்ப்பாட்டத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் கையில் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். திமுக அரசின் இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்ந்தால், போராட்டத்தை கையில் எடுப்போம். நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்வில், மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை. அதன் எதிரொலியாக ஐந்து நபர்கள் தற்போது உயிரிழந்துள்ளனர்.

எங்களுடைய உரிமைக்காக எந்த போராட்டத்தையும் கையிலெடுக்க தயாராக உள்ளோம். நீங்கள் தயாராக இருக்க வேண்டும், இன்னும் 20 நாட்களுக்குள் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வரவேண்டும்.

பணியிடங்கள் நிரப்புவது குறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை என்றால், கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திற்கும் இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகும். மக்களின் நலனுக்காக நாம் சிறை செல்ல தயாராக இருக்க வேண்டும்”

இவ்வாறு பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ பேசினார்.

Tags :
ADMKDMKPoovai Jagan Moorthythirumavalavan
Advertisement
Next Article