தினமும் லாபம் என போலி செயலி பதிவிறக்கம் செய்தவர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி - மர்ம கும்பல் போட்ட திட்டம்!
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப், இவர் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் வைத்துள்ளார். இவரது வாட்ஸ் ஆப்பிற்கு ஒரு எண்ணில் இருந்து லுக் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் ரூபாய் 21,300 முன்பணமாக செலுத்தினால் தினமும் ரூபாய் 700 என மூன்று மாதங்களுக்கு அவரது வங்கி கணக்கில் லாபம் செலுத்தப்படும் என்றும் அதன் பின்னர் அவர் செலுத்திய ரூபாய் 21,300 திரும்ப வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.
மேலும் அவருக்கு தெரிந்த சிலரை சேர்த்து விட்டால் அதற்கும் லாபம் உண்டு என தெரிவிக்கப்பட்டிருந்தது, அவர் தானும் சேர்ந்து கொண்டு தனக்கு தெரிந்தவர்களையும் அதில் சேர்ந்து கொள்ள கூறியுள்ளார்.
தொடர்ந்து சேருபவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களையும் இதில் தொடர்ச்சியாக சேர்க்க மொத்தம் புதுச்சேரியில் 300 பேர் அளவில் இந்த லுக் செயலியை பதிவிறக்கம் செய்து ரூபாய் 21,300 பணத்தை செலுத்தியுள்ளனர். இதில் ஒரு சில நாட்களே அவரவர் வங்கி கணக்கில் ரூபாய் 700 வரவு வைக்கப்பட்டது. அதன் பிறகு பணம் செலுத்தப்படவில்லை.
இது குறித்து பணம் முதலீடு செய்தவர்கள் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர்கள், ஜோசப் உடன் வந்து புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
மேலும், இதில் ரூ. 64 லட்சம் பணம் புதுச்சேரி மக்களிடம் மோசடி செய்யப்படுள்ளதை அடுத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இதே கும்பல், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இதே செயலி மூலமாக மோசடியில் ஈடுப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.