சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ்க்கு ஒரு வழக்கில் மட்டும் ஜாமின் !
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக, ஆஜராக வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் தெரிவிக்க, வளசரவாக்கம் போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது சீமான் வீட்டில் இல்லாததால், வீட்டின் முன்பு கேட்டில் பிப்28-ல் ஆஜராக வேண்டும் என சம்மனை போலீசார் ஒட்டிச் சென்றனர். போலீசார் சம்மனை ஒட்டிய சில நிமிடங்களில் சீமான் வீட்டு பணியாளர் சுபாகர் சம்மனை கிழித்து எறிந்தார்.
இதனையடுத்து இதுதொடர்பாக விசாரணை நடத்த நீலாங்கரை ஆய்வாளர் பிரவின் ராஜேஷ் மற்றும் காவலர்கள் இருவர் சீமான் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டின் பாதுகாவலர் அமல்ராஜ் போலீசாரை உள்ளே விட அனுமதி மறுத்தார். இதனால் போலீசார் அவரை எட்டித் தள்ளி உள்ளே நுழைந்தனர். இதில் போலீசாருக்கும், காவலர் அமல் ராஜுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது அமல்ராஜ் தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியை, போலீசாருக்கு எதிராக எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் மூவர் அவரை தாக்கி, காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதனையடுத்து சீமான் வீட்டு காவலர் அமல்ராஜை, போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து அவர்மீது நீலாங்கரை ஆய்வாளர் பிரவின் ராஜேஷ்,
வளசரவாக்கம் உதவி ஆய்வாளர் கோபி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில், சம்மனை கிழித்து பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், போலீசாரை தாக்கியதாகவும் இரு வெவ்வேறு வழக்குகள் பதியப்பட்டது.
இந்நிலையில் காவலாளி அமல்ராஜ் மற்றும் பணியாளர் சுபாகர் ஆகியோருக்கு ஒரு வழக்கில் மட்டும் ஜாமின் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வளசரவாக்கம் உதவி ஆய்வாளர் கோபி கொடுத்த புகாரில் 207 A பிரிவு வழக்கில் மட்டும் பிணை வழங்கப்பட்டுள்ளது.