சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவியாளர்களாக பணியாற்ற குழந்தைவேல் உள்ளிட்டோர், பணி உயர்வு கோரி கடந்த 2013ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் பணி மூப்பு அடிப்படையில், பதவி உயர்வையும் அதற்கான பணப்பலன்களையும் வழங்க நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை சேலம் பெரியார் பல்கலைக்கழகம் நிறைவேற்றவில்லை எனக்கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடேயே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்ப பெற்றால் தான், பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியலில் பெயர்களை சேர்க்க முடியும் என பல்கலைக்கழகம் பதிவாளர் கடிதம் அனுப்பி இருந்தார்.
எந்த வற்புறுத்தலும் இல்லாமல் இந்த பதவி உயர்வு பட்டியலில் தங்களை இணைக்க வேண்டும் என குழந்தைவேலு உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் வரும் மார்ச் 7ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.