கைவிலங்குடன் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பி பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் அமெரிக்கா, சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்த இந்தியர்களை C-17 என்ற ராணுவ விமானத்தில் அனுப்பி வைத்தது.
டெக்சாஸின் சான் அன்டோனியோவிலிருந்து புறப்பட்ட C-17 அமெரிக்க ராணுவ விமானம், நேற்று பிற்பகல் 1.59 மணியளவில் பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதில் 104 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.
இதற்டையில் அமெரிக்காவில் இருந்து C-17 ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட இந்தியர்கள் குறித்த வீடியோவை அமெரிக்க எல்லைக் காவல்படையினர் வெளியிட்டனர். அதில், இந்தியர்கள் கை, கால்களில் விலங்கு போடப்பட்டிருந்தது. இது குறித்து வெளியுறவுத்துறை விளக்கம் அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இந்திய கூட்டணி எம்பிக்கள் முழக்கமிட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது,
“சட்டவிரோதமாக குடியேறிய அனைத்து நாட்டினரையும் அமெரிக்கா வெளியேற்றி வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்புவது புதிதல்ல. இந்தியர்களை தவறாக நடத்தவேண்டாமென அமெரிக்காவிடம் கூறியுள்ளோம். அமெரிக்க ராணுவ விமானத்தில் அனுப்பும்போது கை விலங்கு போடும் நடைமுறை 2012 முதல் அமலில் உள்ளது; அதன்படி, அவர்களுக்கு கை, கால்களில் விலங்கு போடப்பட்டது. பெண்கள், குழந்தைகளுக்கு கைவிலங்கு போடப்படவில்லை. சட்டவிரோதமாக இந்தியர்களை அமெரிக்காவிற்கு அனுப்பிய இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்"
இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.