பூந்தமல்லியில் சாலையோரக் கடைகள் அகற்றம்! வியாபாரிகள் கொந்தளிப்பு!
சென்னை அருகே பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக, சாலையோர கடைகள் நகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டன.
சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்டப் பணிகள், பூந்தமல்லி டிரங்க் ரோடு பகுதியில் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பூந்தமல்லி பேருந்து நிலையத்தின் முன்பகுதியிலும், உட்பகுதியிலும் ஏராளமான சிறு வியாபாரிகள் சாலையோரக் கடைகள் வைத்து பழம், பூ வியாபாரம் செய்து வந்தனர். மெட்ரோ ரயில் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் இக்கடைகளை அகற்ற வியாபாரிகளுக்கு, நகராட்சி அதிகாரிகள் முன்னரே அறிவுரை வழங்கியிருந்தனர்.
இருப்பினும் சிலர் வியாபாரத்தை தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் இன்று பூந்தமல்லி பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள 20-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகளை, 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து அகற்றினர். இதனால் வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், போலீசார் வியாபாரிகளை சமாதானப்படுத்தி, மாற்று இடம் வழங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் வியாபாரிகள் அமைதி அடைந்தனர்.