கோயிலில் மாலையும் கழுத்துமாக ரவி மோகன், கெனிஷா - பின்னணி என்ன?
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி ரவி உடனான திருமண உறவை முறித்துக்கொள்வதாக கடந்தாண்டு அறிவித்தார். இதையடுத்து அவர் பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் நெருங்கி பழகுவதாக கூறப்பட்டது. இதற்கு ரவி மோகன் மறுப்பு தெரிவித்தார். அப்போது இருந்தே ஆர்த்தி ரவியும், ரவி மோகனும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து அண்மையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் ரவி மோகன், கெனிஷா ஆகியோர் ஒன்றாக பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி மீண்டும் பேசுபொருளானது.
அதன் பின்னர் மீண்டும் ஆர்த்தி ரவி தரப்பில் ரவி மோகனை குற்றம் சாட்டி அறிக்கை வெளியாக, ரவி மோகன் தரப்பில் இருந்து அதற்கு பதிலறிக்கை வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அண்மையில் இவர்களது விவாகரத்து வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் அவதூறு அறிக்கை வெளியிட தடை விதித்தது. இதனிடையே இவர்களது விவாகரத்து தொடர்பாக பாடகி கெனிஷா பிரான்சிஸ் பேரும் தொடர்ந்து அடிபட்டு வந்தது. இது குறித்து கெனிஷா தன் மீது அவதூறு பரப்பினவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் கோயிலில் ரவி மோகன், கெனிஷா ஆகியோர் மாலையும் கழுத்துமாக சென்னையில் உள்ள கோயிலில் வழிபட்டதுபோல் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ரவி மோகன் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோவின் லோகோவை வெளியிடுவதற்கு முன்பு ஒன்றாக இணைந்து கோயிலுக்கு சென்று வழிபட்டதாக கூறப்படுகிறது.
சிங்கம் பதித்த தனது தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவை இன்ஸ்டாகிராமில் ரவி மோகன் வெளியிட, அதை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த கெனிஷா வாழ்த்து கூறியுள்ளார்.