ரம்ஜான் பண்டிகை - குடியரசு தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து!
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் இன்று கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக குடியரசு தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பண்டிகை சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவதோடு, கருணை மற்றும் தொண்டு மனப்பான்மையை ஏற்றுக்கொள்ளும் செய்தியை அளிக்கிறது. இந்த பண்டிகை அனைவரின் வாழ்விலும் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்து, நல்வழியில் முன்னேறிச் செல்வதற்கான மனப்பான்மையை அனைவரது உள்ளங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ரம்ஜான் வாழ்த்துக்கள். இந்த பண்டிகை நமது சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் கருணை உணர்வை அதிகரிக்கட்டும். உங்கள் அனைத்து முயற்சிகளிலும் மகிழ்ச்சியும் வெற்றியும் கிடைக்கட்டும். ஈத் முபாரக்!" என்று தெரிவித்துள்ளார்.