தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் 4 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாட்டை நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், வரும் 7 முதல் 9-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில்), லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து வரும் 10-ம் தேதி சில இடங்களில், 11-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும்.
இதனிடையே தமிழ்நாட்டில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், மதுரை மாவட்டம் கள்ளந்திரி, சென்னை பாரிமுனை, அயப்பாக்கம் ஆகிய இடங்களில் 3 செ.மீ., சென்னை கொளத்தூர், அயனாவரம், தண்டையார்பேட்டை, பெரம்பூர், காசிமேடு, மாதவரம், வில்லிவாக்கம், அமைந்தக்கரை, ஆட்சியர் அலுவலகம், அம்பத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, தொண்டி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறை, சோலையாறு, உபாசி, சின்கோனா ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.