அடுத்த 2 மணி நேரம்.. சென்னை உள்பட 13 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ம் தேதி வாக்கில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 22ம் தேதி வாக்கில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. பின்னர் இது வடக்கு திசையில் நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக நேற்று செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதற்கிடையே, இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.