Rain Alert | இந்த மாவட்டத்திற்கு இன்று மஞ்சள் அலர்ட்... வானிலை ஆய்வு மையம் தகவல்!
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நேற்று முன்தினம் (ஜுன் 16) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக, நேற்று (ஜுன் 17) காலை 05:30 மணி அளவில், தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது.
இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று (ஜுன் 17) காலை 05:30 மணியளவில், குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு திசையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக வரும் 23ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை கொடுத்துள்ளது.