Rain Alert | மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் – பங்களாதேஷ் கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, இன்று (05-11-2025) காலை 08.30 மணி அளவில் வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பங்களாதேஷ் கடலோரப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல், தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.