Rain Alert | மக்களே உஷார்.. 5 மாவட்டங்களுக்கு பறந்த ஆரஞ்சு அலர்ட்!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மோன்தா புயலாக வலுவடைந்தது. மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகரும் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. புயல் சென்னைக்கு கிழக்கு – தென் கிழக்கே 520 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவில் இருந்து 570 கி.மீ, விசாகப்பட்டினத்தில் இருந்து 600 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்.28) காலை தீவிரப்புயலாக வலுப்பெறக்கூடும். மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக நாளை (அக்.28) மாலை – இரவு நேரத்தில் கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்டும், 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்டும் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
ஆரஞ்சு அலர்ட்
சென்னை
செங்கல்பட்டு
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
ராணிப்பேட்டை
மஞ்சள் அலர்ட்
வேலூர்
திருவண்ணாமலை
விழுப்புரம்
கடலூர்
நீலகிரி
கோவை மற்றும் புதுச்சேரி