Rain Alert | மக்களே உஷார்... காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜுன் 3) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ஜுன் 8ம் தேதி வரை மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : தூக்கத்திலேயே பிரிந்த மூதாட்டியின் உயிர்… வளர்ப்பு நாய் செய்த அதிர்ச்சி செயல்!
இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஜுன் 3) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.