Rain Alert | 5 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை... வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
குறிப்பாக, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (ஜுன் 12) முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கோவை, நிலகிரியில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள காரணத்தால் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையும் அங்கு விரைந்துள்ளன.
தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படையை பொறுத்தவரையில் நீலகிரிக்கு 3 குழுக்களும் கோவைக்கு 2 குழுக்களும் சென்றுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.