அசாமில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு திடீர் ரத்து!
இந்தியா முழுவதும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அசாமில் கடந்த 6ம் தேதி 11ம் வகுப்பு தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுகள் மார்ச் 29ம் தேதியுடன் நிறைவடைய இருந்தன. இந்த நிலையில், 11ம் வகுப்பு கணித பாடத்தின் வினாத்தாள் பல்வேறு பகுதிகளில் கசிந்ததாக புகார்கள் எழுந்தது. இந்த புகார் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள் : சாக்லேட் தீம் சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட நபர்… கடைசி ஆசையை நிறைவேற்றிய குடும்பத்தினர்!
இதனையடுத்து, நாளை (மார்ச் 24) முதல் வரும் 29ம் தேதி வரை நடைபெற இருந்த அனைத்து 11 ஆம் வகுப்பு தேர்வுகளையும் ரத்து செய்வதாக அசாம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ரனோஜ் பெகு அறிவித்தார்.
முன்னதாக அசாமின் பார்பெட்டா மாவட்டத்தில் மார்ச் 20 அன்று நடைபெறவிருந்த 9 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வின் வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்தால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 11ம் வகுப்பு தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.