முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் மார்ச் 2, 3 மற்றும் 4-ம் தேதிகளில் பொதுக்கூட்டங்கள் - திமுக அறிவிப்பு!
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் மார்ச் 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் “எல்லோருக்கும் எல்லாம்", “திமுக நாயகரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள்!" நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் 23.2.2024 அன்று காணொலி காட்சி வாயிலாக, திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில், மார்ச் 1-ம் தேதியன்று திமுக தலைவர் 71-ம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான அவர், திமுகவை ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்த பெருமையைப் பெற்றுத் தந்துள்ளார்.
பெரியாரின் சமூகநீதியையும், அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கையையும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சமூகநலத் திட்டங்களையும் மனதில் தாங்கி ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்.
அத்தகைய தலைவரின் பிறந்தநாளை நாம் அனைவரும் சீரிய வகையில் கொண்டாடும் விதமாக திமுக அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கும் பொதுக்கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் நடத்திடுவது" என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி,
வருகிற மார்ச் 2, 3 மற்றும் 4-ம் தேதிகளில் மாநகரம் மற்றும் நகரங்களில் அறிவிக்கப் பட்டுள்ள பேச்சாளர்களைக் கொண்டு, "எல்லோருக்கும் எல்லாம்", "திராவிட மாடல் நாயகர் கழகத் தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள்!" நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் இடங்கள் மற்றும் பேச்சாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.