கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரிய பொதுநல மனு தள்ளுபடி - மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளபடி செய்ததோடு, மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்தும் சிறை நிர்வாகம் அதை வழங்கவில்லை என்றும், இதன் மூலம் கெஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், பதவிக் காலம் முடியும் வரை அமலாக்கத் துறை உள்ளிட்ட குற்ற வழக்குகளிலிருந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி டெல்லி சட்டக் கல்லூரியைச் சேர்ந்த 4-ம் ஆண்டு மாணவர் ஒருவர், 'We the People of India' என்ற பெயரில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன், "இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு என்ன முகாந்திரம் உள்ளது? இவ்வாறு ஒரு மனுவை எப்படி தாக்கல் செய்ய முடியும்?" என கேள்வி எழுப்பினார்.