"சட்டப்படி உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" - சபாநாயகர் அப்பாவு!
நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்வாயில் ஆண்டுதோறும் ஜூன் 15ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு இன்று தோவாளை கால்வாய் நிலப்பாறை என்ற இடத்திலிருந்து ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு கால்வாயில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
தினமும் 150 கன அடி வீதம் 138 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசாணை வெளியிடப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள 52 குளங்கள் மூலம் 17 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் ராதாபுரம் கால்வாய் செல்லும் சுமார் நூற்றுக்கணக்கான கிராம பகுதிகளில் குடிநீர் ஆதாரமாகவும் இந்த ராதாபுரம் கால்வாய் இருந்து வருகிறது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவுவிடம் ஓபிஎஸ் எம்எல்ஏ பதவியை பறிக்க வேண்டுமென தேனியை சேர்ந்த மிலாணி என்பவர் மனு அளித்துள்ளது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்தவர், ஓபிஎஸ் மீது அதிமுகவை சேர்ந்த கொறாடாவோ, நிர்வாகிகளோ இதுவரையில் புகார் தெரிவிக்காத நிலையில் தொகுதியை சேர்ந்த ஒருவர் புகார் அளித்திருப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 10ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து உரிய சட்ட ஆய்வு செய்து பேரவையின் விதிப்படியும் சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.