வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை - தோ்தல் ஆணையம் உத்தரவு!
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை ஜூன் 1 ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வெளியிடக் கூடாது என இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மார்ச் 20 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி, 27 ஆம் தேதியுடன் நிடைவடைந்தது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை ஜூன் 1 ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வெளியிடக் கூடாது என இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
"தமிழ்நாட்டில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தோ்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏப். 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 7 மணியில் இருந்து ஜூன் 1 ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிடக் கூடாது. அதன்பிறகே கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டும்."
இவ்வாறு இந்தியத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.