ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் | பாஜகவினர் உற்சாக வரவேற்பு!
பிரதமர் மோடி, தமிழர்களின் பாரமரிய வேட்டி சட்டை அணிந்தபடி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இன்று இரண்டாவது நாள் பயணமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்சி வந்தடைந்தார். பிரதமர் வருகையால் திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட பிரதமர், ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் தற்காலிக ஹெலிபேட் தளத்திற்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து சாலை மார்கமாக ரங்கநாதரை தரிசிக்க ஸ்ரீரங்கம் சென்ற பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் மலர்களை தூவியும், ஜெய் ஸ்ரீ ராம் போன்ற முழக்கங்களை எழுப்பியும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். காரின் கதவை திறந்து நின்றபடி சென்ற பிரதமர் மோடி, தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.
கோயில் கோபுரத்துக்கு முன்பு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி வருகையையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஸ்ரீரங்கம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, தமிழர்களின் பாரமரிய வேட்டி சட்டை அணிந்தபடி ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி சரியாக 11.20 மணிக்கு ஆலயத்திற்குள் சென்றார் - ஒவ்வொரு சன்னதியாக சென்று தரிசனம் செய்து வந்த நிலையில் புகழ் பெற்ற கம்பராமாயணம் மண்டபத்திற்கு சென்ற பிரதமர் கம்பராமாயணத்தை பாராயணம் செய்ய அதனை அமர்ந்து கேட்டார்.