அத்தியாவசிய மருந்துகளின் விலையினை குறைக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
அதிகரித்து வருகின்ற அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் விலையினை கட்டுபடுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்த விஜய் வசந்த் எம்.பி கூறியதாவது:
“சாதாரண மக்களின் அன்றாட பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. உயிர் காக்கும் மருந்துகளின் விலையும் கடந்த ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது.
புற்று நோய்க்கான மருந்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 50%, நீரிழிவு நோய்க்கான மருந்துகள் கடந்த 3 ஆண்டுகளில் 30% அதிகரித்துள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஜெனரிக் மருந்துகள் நகர் மற்றும் கிராமப்புற மக்களை சென்றடைவதில் பல தடைகள் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு மருந்து நிறுவனங்களை கட்டுபடுத்த தவறிய அரசின் செயல்கள் இந்த விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. மேலும் உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் போதிய மருந்துகளை தயாரித்து, விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் ஒரு முக்கிய காரணமாகும்.
ஆகவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நோய்களை கட்டுபடுத்தும் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளின் விலையினை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவித்து அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவிலே தயாரிப்பதின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் விலையுயர்ந்த மருந்துகளுக்கு மாற்றாக அமையும்.
மேலும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வதை தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும். ஜெனரிக் மருத்துகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். மேலும் விலை நிர்ணயம் செய்வதின் காரணங்களை மக்களுக்கு எடுத்து கூறுவதின் மூலம் மக்களும் விழிப்படைவார்கள். இதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.