தள்ளிப்போகிறதா மக்களவை தேர்தல்? தமிழ்நாட்டில் எப்போது வாக்குப்பதிவு?
புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்து மார்ச 15ல் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளதால் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் என்றாலே பரபரப்பான செய்திகள் அடுத்தடுத்து வரும் என்பது வாடிக்கைதான். எதிர்பாராத தேர்தல் கூட்டணிகள், தலைவர்களின் அதிரடி பேச்சுகள், அள்ளிவீசப்படும் வாக்குறுதிகள் என நொடிக்கு நொடி தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும். அதேபோல், வரும் மக்களவை தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கான பணிகளை தேர்தல் ஆணையமும், அனைத்து கட்சிகளும் மும்முரமாக செய்து வரும் நிலையில், தேர்தல் அட்டவணை மற்றும் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றின் தேதிகளும் எப்போது அறிவிக்கப்படும் என நாடே எதிர்பார்ப்பில் உள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்து மார்ச 15ல் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளதால் தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்குப் பின் தேர்தல் தேதிக்கான அறிவிப்பு மார்ச் இறுதி வாரம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 2வது வாரத்திலும், தமிழ்நாட்டிற்கு மே மாதத்திலும் மக்களவை தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.