ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சு!
'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் கடந்த ஜூன் 12ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானை சரணடைய கோரி எச்சரித்து வந்தார். அதற்கு ஈரானிய உச்ச தலைவர் கமேனி, அமெரிக்க இந்த மோதலில் தலையிட்டால் கடும் விளைவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என பதில் எச்சரிக்கை கொடுத்தார்
தொடர்ந்து அமெரிக்க அதிபர், ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி, போர் விமானங்கள் பத்திரமாக திரும்பியதாக கூறினார். இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மிகவும் வெற்றிகரமானது தாக்குதல் என்றும் தெரிவித்தார். இந்த தாக்குதலில் அசம்பாவிதத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் கதிர்வீச்சு கண்டுபிடிப்பாளர்களால் எந்த கதிரியக்க வெளியீடும் கண்டறியப்படவில்லை என்றும் அந்நாட்டின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு அமைப்பு மையம் கூறியதாக ஈரானிய ஊடங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் ஈரானின் தற்போதைய நிலைமை குறித்து அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஸ்கியானுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியானுடன் பேசினேன் தற்போதைய நிலைமை குறித்து விரிவாக விவாதித்தோம். சமீபத்திய மோதல்கள் குறித்து கவலை தெரிவித்தேன். நிலைமையை மீட்டெடுப்பதற்கும் உடனடியாக பதற்றத்தைக் குறைப்பதற்கும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியாக அணுக வலியுறுத்தினேன்” என்று தெரிவித்துள்ளார்.