பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி - இன்று முதல் துவக்கம்!
தமிழ்நாட்டில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று முதல் துவங்க உள்ளது.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்.1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி தொடங்கிய 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு வரும் 25 ஆம் தேதி முடிவடைந்தது. அதேபோல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தேர்வுகள் முடிவடைந்த பிறகு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் அதற்கான தேதிகளையும் சமீபத்தில் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
” 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த பின் தேர்வுத்தாள்கள், விடைத்தாள்கள் சேர்த்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து மார்ச் 23 ஆம் தேதி மண்டலத்திற்கு கொண்டு வரப்பட்டு முதன்மை விடைத்தாள் திருத்தும் அலுவலர், கூர்நோக்கு அலுவலர் சோதனை அடிப்படையில் ஏப்ரல் 1 ஆம் தேதி பரிசோதனை செய்த பின், விடைத்தாள்கள் திருத்தும் பணியினை ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் மேற்கொள்வர்” என தெரிவித்தது.
தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 6-இல் வெளியிடப்படவுள்ளன. விடைத்தாள் மதிப்பீட்டின்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.