22% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல்... இன்றுமுதல் 3 நாட்களுக்கு மத்தியக்குழு டெல்டாவில் ஆய்வு!
டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு கனமழை பெய்து
வருதாலும், வானம் மேகமூட்டத்துடனும், தொடர்ந்து பனிப்பொழிவுடனும் உள்ளதால் அதிக ஈரப்பதத்தில் உள்ள நெல் மணிகளைக் கொள்முதல் செய்ய விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, 17% ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதைத் தளர்வு செய்து 22% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கடிதம் எழுதி இருந்தார். இதை ஏற்று, இது தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. இன்று பகல் திருச்சி வரும் இந்த மத்திய குழுவினர் பிற்பகல் முதல் ஆய்வை தொடங்க உள்ளனர்.
முதல் இடமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இன்று மாலை ஆய்வு மேற்கொள்கின்றனர். நாளை காலை திருவாரூர் மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். நாளை மதியம் நாகை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
24ம் தேதி காலை மயிலாடுதுறை மாவட்டத்திலும், மாலை கடலூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். 25ம் தேதி நெல் மாதிரிகளை சென்னையில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின்
ஆய்வுகத்தில் சமர்பித்து இது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை நடத்துகின்றனர்.