Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில் பாஜக அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில் நிற்கிறேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

07:51 AM Jul 27, 2024 IST | Web Editor
Advertisement

"நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில் பாஜக அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில் நிற்கிறேன்" என காணொலி வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 

Advertisement

டெல்லியில் இன்று ( ஜூலை 27 ) நடைபெறும் “நிதி ஆயோக்” ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 2047க்குள் நாட்டை வளர்ந்த பொருளாதாரமாக மாற்றுவது, MSMEகள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், இணக்கங்களைக் குறைத்தல், பெண்கள் அதிகாரமளித்தல், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, வளர்ச்சி மற்றும் சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என தகவல் வெளியானது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வதாக முன்பு அறிவிக்கப்பட்டது. மேலும் டெல்லியில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திக்க நேரம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 23ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என கூறி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும், இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தை தான் புறக்கணித்ததற்கான காரணம் குறித்து காணொலி ஒன்றை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

காணொலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது..

தலைநகரில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில், மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில் நிற்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு மாநில மக்கள் பாஜகவை புறக்கணித்தார்கள். அந்த மாநில மக்களை பழிவாங்குகிற பட்ஜெட்டாகதான் மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் அமைந்திருக்கிறது.

தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவோம் எனக் கையெழுத்து போட்டால்தான் நிதியை விடுவிப்போம் என்று என மத்திய அரசு அடம்பிடிக்கிறது . மாணவ, மாணவிகளின் கல்வி பாழாகுமே, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை வருமே என ஒரு துளி கவலை கூட இல்லாமல், தங்களின் கொள்கைத் திணிப்பையும் இந்தித் திணிப்பையும் மட்டுமே முன்னிறுத்தக் கூடியதாகத்தான் பாஜக அரசு இருக்கிறது.

மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையால் மக்கள் மன்றத்தில் நிற்கிறேன். தமிழ்நாடு என்ற சொல்லே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை மதுரை எய்ம்ஸ் திட்டம் 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது தமிழ்நாட்டிற்கு எந்த சிறப்பு திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை ” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Budget 2024CMO TamilNaduMK StalinNiti AyogTN Govtunion budget
Advertisement
Next Article