வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியன் வெற்றி செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ்.மணியன் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில், வேதாரண்யம் தொகுதியில்போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். இந்த தேர்தலில் அவரை எதிர்த்து போராட்டியிட்ட திமுக வேட்பாளா் வேதரத்தினத்தை விட சுமார் 12,329 வாக்குகள் வித்தியாசத்தில் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றாா்.
ஆனால், ஓஎஸ்மணியன் வெற்றியை எதிா்த்து, தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், தொகுதி முழுவதும் அதிமுக வேட்பாளா் ஓ.எஸ்.மணியன், ரூ. 60 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா செய்துள்ளாா். இரு வேறு சமூக மக்களிடையே விரோதத்தைத் தூண்டியும், பரிசுப் பொருள்களுக்கான டோக்கன்களை விநியோகித்தும், வேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சுமாா் 7 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்தும் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றுள்ளாா்.
இது தவிர அதிகார துஷ்பிரயோகம் மூலம் வேதாரண்யம் நகராட்சி ஆணையா், காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகளை தனது தோ்தல் முகவா்கள் போல பயன்படுத்தியுள்ளாா் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்னிலையில் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நவம்பர் 20ந்தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ். மணியனின் வெற்றி செல்லும் என்று நீதிபதி தண்டபாணி தீர்ப்பளித்தார்.