அங்கன்வாடிகளில் இனி உப்புமாவுக்கு பதில் பிரியாணி... 3 வயது சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய கேரள அரசு!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சங்கு என்ற மூன்று
வயது சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. தனது வீட்டின் அருகே உள்ள அங்கன்வாடியில் படித்து வரும் சிறுவன், வீட்டில் இருந்தபோது தனக்கு அங்கன்வாடியில் பிரியாணி தரவில்லை என்றும், உப்புமா வேண்டாம் என்றும், பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை தந்தால் தான் அங்கன்வாடிக்கு செல்வேன் என்று கூறினான்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. வீடியோவை பார்த்த கேரளா சுகாதாரம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் வீணா சார்ஜ் மூன்று வயது சிறுவன் சங்குவின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும், விரைவில் அங்கன்வாடி உணவு முறையில் உரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
அதன்படி கேரளாவில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பத்தனம்திட்டாவில் நேற்று நடந்த அங்கன்வாடி குழந்தைகள் சேர்க்கை விழாவில் அமைச்சர் மீனாட்சி இதனை அறிவித்தார்.
சங்குவின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாகவும் வாரத்தில் ஒரு நாள் முட்டை பிரியாணி மற்றும் புலாவ் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாரத்தில் இரண்டு நாட்கள் வழங்கப்பட்டு வந்த பால், முட்டை இனி மூன்று நாட்கள் வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து சிறுவன் சங்கு, அமைச்சர் வீணா சார்ஜ்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.