”உலகின் எந்த சக்தியும் இந்தியாவின் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கையை தடுக்க முடியாது” - பிரதமர் மோடி!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் தொடா்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியது :
”ஆபரேஷன் சித்தூர் வெற்றியை கொண்டாடும் நேரம் இது.அணு ஆயுத தாக்குதல் மிரட்டலை கண்டு இந்தியா அசரவில்லை. நமது படைகள் வலுவான தாக்குதல் நடத்தி எதிரியை நிலைகுலைய வைத்தன. பாகிஸ்தானில் இதற்கு முன்பு தாக்கப்படாத இடங்களில் தாக்குதல் நடத்தினோம்.பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன
எந்த அணு ஆயுதம் மிரட்டலுக்கும் இந்தியா அடிபணியாது.இந்தியாவின் தொழில் நுட்பத்தின் வெற்றி பாகிஸ்தான் விமான தளங்களில் கடும் பாதிப்பை உண்டாக்கியது.பாகிஸ்தானின் விமான தளங்கள் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளன. நமது விமானப்படை, ராணுவம் மற்றும் கடற்படை ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டன. இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத சதி செய்பவர்களை இந்தியா நிச்சயம் தாக்கும் என்பது தற்போதைய நிலை .இந்தியாவின் மீது தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் ஊக்குவித்தால் இனி அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும்.இனி தீவிரவாத தாக்குதல் நடைபெற்றால், நாம் பதிலடி கொடுப்போம்.தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதத்தை வளர்ப்பவர்களை இனி தனித் தனியாக பார்க்க மாட்டோம். உலகின் எந்த சக்தியும் இந்தியா தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தடுக்க முடியாது.
ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அளவில் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. ஐ.நா.வில் உள்ள 193 நாடுகளில் மூன்று நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றன.இந்தியா தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதை எந்த நாடும் தடுக்கவில்லை.உலக நாடுகள் அனைத்தும் நம்மை ஆதரிக்கின்றன, ஆனால் காங்கிரஸ் கட்சி ஆதரவு மட்டுமே கிட்டவில்லை.அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் அரசை விமர்சித்தது. அரசுக்கு எதிரான நிலைப்பாட்டால், காங்கிரஸ் கட்சியின் முகத்திரை கிழிந்தது.காங்கிரஸ் எங்களை விமர்சித்து தலைப்புச் செய்திகளை உருவாக்கலாம், ஆனால் மக்களின் மனதை வெல்ல முடியாது.முன்பு துல்லிய தாக்குதல் நடைபெற்ற போதும் காங்கிரஸ் கட்சி இதே போன்ற நிலைப்பாட்டில் விமர்சனங்களை முன்வைத்தது. துல்லிய தாக்குதலில் ஒரே இரவில் தீவிரவாத முகாம்கள் வீழ்த்தப்பட்டன. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் முகாம்கள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் குறி வைக்கப்பட்டன.ஆப்ரேஷன் சிந்தூர் குறிக்கோள்கள் தெளிவாக இருந்தன. இந்திய விமானப்படை "ஆப்பரேஷன் சிந்தூர்" நடவடிக்கையின் 100 சதவிகித வெற்றியை உறுதி செய்தது”
என குறிப்பிட்டார் மோடி.
மேலும் அவர், “தீவிரவாத முகாம்களை தாக்கினோம் என்பதை தெளிவாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவித்தோம்.எங்களது குறிக்கோள்களை அடைந்து விட்டோம் என தெளிவாக அப்போதே குறிப்பிட்டோம்பாகிஸ்தானுக்கு புரிதல் இருந்திருந்தால் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக களம் இறங்கி இருக்காது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக படைகளை களத்தில் இறக்கியதால், நமது படைகள் வலுவாக பதிலடி அளித்தன.இதனால் நிலைகுலைந்த பாகிஸ்தான், போர் நிறுத்தம் கோரி இந்தியாவை தொடர்பு கொண்டது.இந்தியா ஏவுகணைகள் இவ்வளவு வலுவாக தாக்கும் என பாகிஸ்தான் எதிர்பார்த்து இருக்காது. தயவு செய்து தாக்குதலை நிறுத்துங்கள் என பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது. இதற்கு மேல் எங்களால் தாங்க முடியாது என பாகிஸ்தான் நிலைகுலைந்து, நமது ராணுவத்தை தொடர்பு கொண்டது
ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானின் ராணுவ வலிமையை வெகுவாக நாசப்படுத்தியது. வரும் காலங்களில் இந்தியா என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பது பாகிஸ்தானுக்கு தெளிவாகிவிட்டது. பாகிஸ்தான் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால், மிகவும் வலுவான பதிலடி கொடுக்கப்படும். இன்றைய இந்தியா தன்னம்பிக்கையால் நிறைந்துள்ளது, இந்தியா யாரையும் நம்பி இருக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானை நம்பி உள்ளது. சுய சார்பு இந்தியா வலிமையாக உள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுகிறது. மக்களின் மனதில் சந்தேகங்களை விதைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. துல்லிய தாக்குதல் சமயத்திலும் பல சந்தேகங்களை காங்கிரஸ் எழுப்பியது எனவும் ஆனால் மக்களின் எண்ணத்தை கண்ட பிறகு நாங்களும் அத்தகைய தாக்குதல் நடத்தினோம்”
என்று தெரிவித்தார்.