மீண்டும் சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரானார் நிதின் கட்காரி!
மீண்டும் சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக நிதின் கட்காரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று (ஜூன் 9) டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கும் அவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் முடிவடைந்தது.
பின்னர் அவர் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் பி.எம். கிஷான் நிதி திட்டத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதற்கான கோப்பில் முதல் கையெழுத்தை போட்டார். பிரதமரின் கிஷான் நிதி திட்டம் என்பது மத்திய வேளாண்துறையின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி வழங்கும் திட்டம் ஆகும்.
இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு தவணையாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி தனது கையெழுத்தாக அந்த திட்டத்திற்கான 17 வது தவணை தொகையாக ரூ.20,000 கோடியை ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
மேலும் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிதின் கட்காரிக்கு மீண்டும் சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல இத்துறையின் இணையமைச்சர்களாக ஹர்ஷ் மல்ஹோத்ரா மற்றும் அஜய் டம்ட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.