நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி | மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்!
மாம்பழம் விளைச்சல் அமோகமாக இருந்தும் போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள், மாம்பழங்களை சாலையோரம் கொட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். மாம்பழ விவசாயிகளின் வேதனையை ‘வீணாகும் மாம்பழங்கள்.., வேதனையில் விவசாயிகள்’ எனும் தலைப்பில் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாக வெளியிட்டது. இந்த நிலையில், நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக தமிழ்நாட்டில் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் ஆலைகள் விவசாயிகளிடமிருந்து மாங்கனிகளை உடனடியாகக் கொள்முதல் செய்ய வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறபட்டுள்ளதாவது,
"தமிழ்நாட்டில் சுமார் 1.46 லட்சம் எக்டரில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 9.5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, திருவள்ளூர், தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் பெங்களூரா, பங்கனபள்ளி, இமாம்பசந்த், நீலம், செந்தூரா, அல்போன்சா, ருமானி போன்ற ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. மா ரகங்களைப் பொறுத்தவரை, இயற்கையாகவே ஒரு ஆண்டில் அதிக மகசூலும் அதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு குறைவான மகசூலும் தரும் தன்மை கொண்டது.
இந்த சுழற்சி பெரும்பாலும் அனைத்து மா ரகங்களிலும் காணப்படுகிறது.
நடப்பாண்டில், பருவநிலை மா உற்பத்திக்கு உகந்ததாக அமைந்ததால் சராசரி மகசூலான எக்டருக்கு 5 முதல் 6 மெட்ரிக் டன் என்பது எட்டு மெட்ரிக் டன்னுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த உற்பத்தி அதிகரிப்பினால் மாம்பழக்கூழ் தயாரிப்பு மற்றும் பதப்படுத்துதலுக்கு உகந்த பெங்களூரா ரகம், பதப்படுத்தப்படும் நிறுவனங்களால் விவசாயிகளிடமிருந்து கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் மாம்பழக்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விலை நிர்ணயித்த பின்னரும் மாம்பழக்கூழ் உற்பத்தியாளர்கள் குறைந்த விலையில் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் தலைமையில், தோட்டக்கலைத்துறை இயக்குநர், கிருஷ்ணகிரி. திண்டுக்கல், தருமபுரி, திருவள்ளூர், தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர், மதுரை ஆகிய மாவட்ட தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மற்றும் மா பதப்படுத்தும் நிறுவனங்களுடன் 16.06.2025 அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், மா பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் சென்ற ஆண்டின் மாம்பழக்கூழ் கையிருப்பு அதிகம் உள்ளதால், பதப்படுத்தும் நிறுவனங்களின் தேவை குறைந்துள்ளதாகவும், உற்பத்தி அதிகம் இருப்பதால், விவசாயிகளிடமிருந்து உரிய விலைக்கு மா கொள்முதல் செய்ய இயலாத நிலை உள்ளது எனவும், ஜூன் 20க்கு மேல் மா வில் இனிப்புத்தன்மை (TSS) 20 பிரிக்ஸ் என்ற அளவில் இருக்கும் என்பதால் அப்பொழுது விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து கொள்வதாகவும். பதப்படுத்தும் நிறுவனங்களால் தெரிவிக்கப்பட்டது.
மா உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன் கருதி மா பதப்படுத்தும் நிறுவனங்கள் மாம்பழக்கூழ் தயாரிக்கும் பணிகளை உடன் தொடங்கவும். மாம்பழக்கூழ் தயாரிக்க பெங்களூரா ரகத்தினை நியாயமான விலையில் உடனடியாக உழவர்களிடமிருந்து மா பதப்படுத்தும் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் கேட்டுக்கொண்டார். அதற்கு, மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறுவணங்கள் ஆவன செய்வதாகத் தெரிவித்து மாம்பழக்கூழ் உற்பத்தியினை தற்போது ஆரம்பித்து உள்ளனர்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ்7 தமிழ் வெளியிட்ட செய்தி குறிப்பை காண..