இன்ஸ்டாகிராம் பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு!
உலகின் முன்னனி சமூக வலைத்தள நிறுவனமாக 'மெட்டா' நிறுவனம் உள்ளது. மெட்டா நிறுவனத்தின் கீழ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய சமூக வலைதளங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி பெற்றோர்கள் தங்களின் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகளை நேரடியாக மேற்பார்வையிட கூடுதல் வசதிகளை அளித்துள்ளது.
முதல் கட்டமாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடாவில் இந்த அம்சம் அறிமுகமாக இருக்கிறது. உலகிலேயே முதல் நாடாக ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனம் அறிவித்துள்ள புதிய அறிவிப்பின்படி, இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மெட்டா நிறுவனங்களின் கணக்குகள் ஸ்லீப் மோடுக்கு சென்றுவிடும். மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த அம்சங்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் அமலுக்கு வரவுள்ளது.