புதிய தேர்தல் ஆணையர் - பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 15ல் ஆலோசனை!
புதிய தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 15ல் ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக, மாநிலம் தோறும் சென்று அரசியல் கட்சிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
வருகின்ற 2027 ஆம் ஆண்டு வரை இவரின் பதவிக்காலம் உள்ள நிலையில் திடீரென பதவி விலகியுள்ளார். மேலும், மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அருண் கோயல் பதவி விலகியுள்ளார். இவரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
ஏற்கனவே தேர்தல் ஆணையராக இருந்த அனுப் பாண்டேவின் பதவிக்காலம் முடிந்தது. தற்போது 3 இந்திய தேர்தல் ஆணையர்களில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் மட்டுமே உள்ளார். இந்த சூழலில் தான் அருண் கோயல் ராஜினாமா செய்தள்ளார்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமாவைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்மட்ட குழு புதிய தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து வரும் மார்ச்.15ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.