Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெல்லை சிபிஎம் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம் - நாகை மாலியின் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை!

12:20 PM Jun 25, 2024 IST | Web Editor
Advertisement

நெல்லை சிபிஎம் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் உறுப்பினர் நாகை மாலியின் தீர்மானத்திற்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். 

Advertisement

சட்டப்பேரவை இன்று காலை 9:30மணிக்கு தொடங்கியதும்  சபாநாயகர் அப்பாவு திருக்குறளை வாசித்துவிட்டு தொடர்ந்து பேசத் தொடங்கினார்.  இதனைத் தொடர்ந்து அவை தொடங்கிய உடனே  அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் கத்தி கூச்சல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மேலும் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அவர்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.  கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி  நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இது தொடர்பாக நாகை மாலி பேசியதாவது..

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை முறையாக நடந்து கொள்ளவில்லை.  இந்த சம்பத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்,  முக்கியமானவர்களின் தொலைபேசி எண்களை கண்காணிக்க வேண்டும்.  மாவட்டச் செயலாளருக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும்” என தெரிவித்தார்.

நாகை மாலி கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்,  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,  மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டம்,  ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 13-6-2024 அன்று இருவேறு சமூகத்தைச் சார்ந்த மணமக்களுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைக்கப்பட்டு,  அது தொடர்பான புகைப்படம் முகநூல் பக்கத்திலே பதிவிடப்பட்டதாகத் தெரிகிறது.

இதனையடுத்து,  மணப்பெண்ணின் குடும்பத்தினர் கடந்த 14-6-2024 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று,  இதுகுறித்துக் கேட்டு,  தகராறில் ஈடுபட்டு, அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள்.  இச்சம்பவம் தொடர்பாக, அக் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்,  பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு,  14 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 7 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

7 ஆண்கள் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். விசாரணையில் இச்சம்பவத்தில் சாதிய வன்கொடுமை நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாகச் தெரியவந்ததையடுத்து,  இவ்வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளும் சேர்க்கப்பட்டு,  தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  புதிய சட்டங்களுக்கு மாறாக,  இது போன்ற வழக்குகளை முறையாக நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தருவது தான் சரியாக இருக்கும்,

உறுப்பினர்கள் குறிப்பிட்டபடி இதற்கென ஒரு சிறப்புச் சட்டத்தைக் தற்போது இதுபோன்ற குற்றங்களுக்கு நடைமுறையிலுள்ள கொண்டுவருவதைவிட,  சட்டப்பிரிவுகள்,  குறிப்பாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்,  இந்திய தண்டனைச் சட்டம்,  இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில்,  தீவிரமான,  வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது என்று இந்த அரசு கருதுகிறது.

அந்த வகையில் சமீபத்தில் பல வழக்குகளில், அதிலும் கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற குற்றங்களில்கூட விசாரணை துரிதப்படுத்தப்பட்டு,  குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வாங்கித் தரப்பட்டு வருகின்றன.  குறிப்பாக, கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் காவல் சரகம், புதுக்கூரைப்பேட்டையில் 8.7.2003 அன்று நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் கடந்த 29.2.2024 அன்று குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அதேபோல,  2015 ஆம் ஆண்டில்,  நாமக்கல் மாவட்டத்தில் கோகுல்ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு முறையாக கண்காணிக்கப்பட்டு,  வேகப்படுத்தப்பட்டு,  இம்மாதம் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில்,  மதுரை மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் 8.3.2022 அன்று வழங்கிய தீர்ப்பு,  மாண்பமை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையால் உறுதிசெய்யப்பட்டது.  அதேபோல, கடலூர் மாவட்டத்தில் ஆதிவராகநத்தத்தைச் சேர்ந்த சீதா என்பவர் 15.6.2014 அன்று கொலை செய்யப்பட்டதையடுத்து, தொடர்புடைய குற்றவாளிகள் 16.7.2014 அன்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

இருப்பினும்,  தற்போது நமது இலக்கு சற்று தொலைவில் இருப்பதாகத் தோன்றினாலும், நடைமுறையில் இன்று சந்தித்து வரும் சமூகரீதியிலான பிரச்சினைகளை,  அதன் விளைவுகளை இங்கே பேசிய உறுப்பினர்கள் குறிப்பிட்டதைப்போல உடனடியாக எதிர்கொள்ளவும்,  அதற்கொரு தனி முக்கியத்துவம் அளிக்கும் விதமாகவும், சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்திட, அரசுத் தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் (Special Public Prosecutors) நியமிக்கப்படுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல,  தற்போது இதுபோன்ற குற்றங்களில் எல்லாம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி காவல் ஆய்வாளர் விசாரணை அலுவலராக நியமிக்கப்படுகிறார்.  ஆனால், இவ்வழக்குகளில் விசாரணையின் தன்மையை மேலும் தீவிரப்படுத்தும் வகையிலும், வேகப்படுத்தும் நோக்கிலும் விசாரணை அலுவலராக காவல் துணைக் கண்காணிப்பாளரை நியமிப்பது குறித்து சட்ட ஆலோசனையைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என்பதையும் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்ல,  உறுப்பினர்கள் பேசும்போது குறிப்பிட்டதைப்போல,  இக்குற்றங்களைக் குறைக்கும் வகையில் மாவட்ட அளவிலான குழுக்கள்,  அவை அமைக்கப்பட்டதன் பின்னணி மற்றும் அவற்றின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றியெல்லாம் மீண்டும் ஆய்வு செய்து,  அதுகுறித்தும் தேவையான முடிவுகள் எடுக்கப்படும் என்பதைத் தங்கள் வாயிலாக இந்த அவைக்குத் தெரிவித்து அமைகின்றேன்..

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

Tags :
CPM OfficeMK StalinNagai MaliNellaiNellai CPIM OfficeTN Assembly
Advertisement
Next Article