"என் தந்தை நலமுடன் உள்ளார்" - நடிகை ஈஷா தியோல் பதிவு!
இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா (89). கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக இவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு அவரது குடும்பம் மறுப்பு தெரிவித்திருந்தது. இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. அத்துடன் இவரது மறைவிற்கு பலரும் இரங்கலை தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகர் தர்மேந்திரா உயிருடன் இருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையுமான ஹேமமாலினி பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “நடப்பது மன்னிக்க முடியாதது! சிகிச்சை பெற்றுகுணமடைந்து வரும் ஒரு நபரைப் பற்றி பொறுப்புள்ள சேனல்கள் எப்படி பொய் செய்திகளை பரப்ப முடியும்? இது மிகவும் அவமரியாதையான மற்றும் பொறுப்பற்ற செயல். எங்கள் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு உரிய மரியாதை கொடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
அவரைத்தொடர்ந்து தர்மேந்திராவின் மகளும், நடிகையுமான ஈஷா தியோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "என் தந்தை நலமுடன் உள்ளார், குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.