வெறி நாய்கள் கடித்து பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு!
கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த நெடுங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராசப்பன். கால்நடை விவசாயியான இவர் தனது வீட்டுக்கு அருகே பட்டி அமைத்து அதில் 40 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இதனிடையே நேற்று வழக்கம் போல் தனது நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார்.
இந்த நிலையில் வழக்கம்போல் இன்று காலை ஆடுகளை பார்ப்பதற்கு ராசப்பன் பட்டிக்கு வந்த போது 7 பெரிய ஆடுகளும், 4 குட்டிகளும் வெறிநாய்கள் கடித்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், 5-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கால்நடைத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தப் பகுதியில் தொடர்ந்து வெறிநாய் தாக்குதலுக்கு உள்ளாகி ஆடுகள் பலியாகும் சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகின்றன.
வெறி நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தற்போது மேய்ச்சலுக்கு விடும் ஆடுகளையும், வெறிநாய்கள் வேட்டையாடி கடித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. வெறிநாய் தாக்கியதில் சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஆடுகள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.