2024-ம் ஆண்டில் எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி - எலான் மஸ்க் அறிவிப்பு!
எக்ஸ் தளத்தின் மூலம் பயனர்கள் பண பரிமாற்றம் செய்யும் வசதியை கொண்டு வரவுள்ளோம். இதற்கான உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என ட்விட்டர் (எக்ஸ்) தளத்தின் உரிமையாளர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே அடிக்கடி அதிரடியான பல மாற்றங்களை செய்து வருகிறார். சமீபத்தில் 1 நாளைக்கு பயனர்கள் குறிப்பிட்ட பதிவுகள் மட்டும் தான் பார்க்கமுடியும் என ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார். மேலும் புளூ டிக் பயன்படுத்துவோருக்கு கட்டணம், ட்விட்டரில் விளம்பரம் செய்து பொருளீட்டுதல் போன்ற மாற்றத்தை ஏற்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து ட்விட்டர் என்ற பெயரை எக்ஸ் (X) என மாற்றினார். அதன் லோகோவை மாற்றினார். மேலும் ஏற்கெனவே நடைமுறையிலுள்ள எக்ஸ் பிரீமியம் சேவைக்கு, இந்தியாவில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் பயனர்களுக்கு, ஆண்டு சந்தாவாக ரூபாய் 900-ம் இணைய பயனர்களுக்கு ரூபாய் 650-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து ட்விட்டர் (எக்ஸ்) வலைதளத்தின் மூலம் எலான் மஸ்க் பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, எக்ஸ் வலைதளத்தின் மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில், தற்போது எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய எலான் மஸ்க் "எக்ஸ் தளத்தின் மூலம் பயனர்கள் பண பரிமாற்றம் செய்யும் வசதியை கொண்டு வரவுள்ளோம். இதற்கான உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். அரசாங்கம் ஒப்புதல் தந்தவுடன் எக்ஸ் தளத்தின் மூலம் மற்றவர்களுக்கு பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
2024-ம் ஆண்டிற்குள் அரசு ஒப்புதல் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம். எனவே, அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இருந்து பயனர்கள் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம்” என கூறியுள்ளார்.