மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ளன. பரப்புரைக்கு 18 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பிரதானமாக திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. குறிப்பாக, திமுக கூட்டணி சார்பில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைக் கழக பேச்சாளர்கள் தொகுதி வாரியாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை அவர் இன்று வெளியிட்டுள்ளார்.
அதில்,
நேற்று மாலைச் செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!
நேற்று காலைச் செய்தி: அழகிய தமிழ்ச்சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.
மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்? ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்? கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?
பிரதமர் மோடி அவர்களே... கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்று தான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு! விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை. "எங்கும் இந்தி! எதிலும் இந்தி!" என மாற்றியது தான் மோடி அரசின் அவலச் சாதனை! தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்! என்று குறிப்பிட்டுள்ளார்.