சூடானில் ராணுவ விமானம் விபத்து - 46 பேர் உயிரிழப்பு !
ஓம்துர்மன் நகரில் உள்ள சூடான் ராணுவத்தின் மிகப்பெரிய விமானப் படைத் தளமான வாடி சீட்னாவில் இருந்து நேற்று (பிப்.25) செவ்வாய்க்கிழமை இரவு ராணுவ விமானம் புறப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் அன்டோனோவ் விமான நிறுவனம் தயாரித்த இந்த விமானத்தில், சூடான் மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட பலர் பயணித்ததாக கூறப்படுகின்றது.
இந்த விமானம் வாடி சீட்னாவில் இருந்து புறப்பட்ட சில நொடிகளில் குடியிருப்புப் பகுதியின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சூடான் ராணுவ மேஜர் ஜெனரல் பஹர் அகமது உள்பட 46 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குடியிருப்புப் பகுதிகளில் இருந்த சிலரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விமான விபத்தில் பல வீடுகள் சேதமடைந்ததாக கூறப்படும் நிலையில், மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், விபத்தில் ராணுவ ஜெனரல் உயிரிழந்தது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. சூடான் நாட்டில் கடந்த 2023 முதல் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது விமானம் தாக்குதலுக்கு உள்ளானதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.